தமிழகத்தில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், சலூன்கள் உள்ளிட்ட அழகு நிலையங்கள் திறக்கப்படுவது எப்போது என்ற கேள்வி அரசிடம் முன்வைக்கப்படுகிறது.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிலைமைக்கு ஏற்றவாறு தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேநீர் கடைகளை திறக்க அனுமதி உள்ளிட்ட மேலும் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.
சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) தேனீர் கடைகள் பார்சல் சேவைக்கு மட்டும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. தேனீர் கடைகளில் சமூக இடைவெளியை தவறாமல் கடை பிடிக்க வேண்டும். மேலும், தினமும் 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையை சுத்தமாகவும் சுகாதரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.கடையில், வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ, ஏதும் உட்கொள்ள அனுமதி இல்லை. இதை முறையாக கடைபிடிக்க தவறும் தேனீர் கடைகள் உடனடியாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெட்ரோல் பம்புகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என்றும், பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பம்புகள் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என்றும், பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதையும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தி பணிபுரிவதையும், பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதையும், கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையாளர்களுக்கும், காவல் துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து முழுமையாக கடைபிடிக்கப்படும் என்றும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு
நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் அரசு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் வெளியிடப்பட்ட ஊரடங்கு தளர்வு அறிவிப்பில், சிறிய கடைகளை திறக்க அனுமதி அளித்தபோதும், சலூன்கள் திறப்பு பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பிலும் இது தொடர்பான அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
மற்ற கடைகளைப் போல, சலூன்கள் உள்ளிட்ட அழகு நிலையங்களில் வாடிக்கையாளர் - பணியாளர் இடையே சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் சிக்கல்கள் இருப்பதே, இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில், அனுமதி இன்றி இயங்கிய சலூன் உரிமையாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனினும், வரும் 17 முதல் நாடு தழுவிய ஊரடங்கு முடிய உள்ள நிலையில், அதுவரை சலூன்கள் திறப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.